" தர்மார்த்த காமமோக்ஷ ப்ரதாயகாய நமோ நம: "
வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தைக் காபாற்றிக் கொள்ளத் துணி, இருப்பதற்கு ஒரு வீடு - இம்மாதிரியான அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். இதற்கு மேல், ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. அப்படி மற்றவர்களை பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வாழ வேண்டும்.
நிரந்தர ஒற்றுமைக்கு வழி, சேர்ந்து உண்டு காட்டுவதல்ல, சேர்ந்து தொண்டு காட்டுவதேயாம். நாம் பல சமயங்களில் சொன்னதுபோல ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் எல்லா மக்களும் சேர்ந்து எல்லா மக்களுக்குமான தொண்டுகளைச் செய்வதால் தான், ஒற்றுமை வளரும்.
வரதட்சிணை கேட்டால் கல்யாணத்திற்கு கண்டிப்பாக மறுத்து விட வேண்டியது பிள்ளையின் கடமை.
இது குடும்பத்திற்கு, மதத்திற்கு, சமூகத்திற்கு, பெண் குலத்திற்கு, எல்லாவற்றிற்கும் செய்கிற தொண்டு.
இப்படியாக இளைஞர்கள் எல்லோரும் சபதம் செய்து அதை நிறைவேற்ற வேண்டும்.
கல்யாணத்திற்கு தங்கத்தினால் திருமாங்கல்யம் மட்டும் பண்ணினால் போதும். மற்ற நகைகள், வைரத்தோடு முதலியன வேண்டாம். பட்டும் வேண்டாம். நூல் கூறைப் புடவை வாங்கினால் போதும்.
எல்லாவற்றையும் விட வரதட்சணை தொலைய வேண்டும். ஊர்கூட்டி சாப்பாடு, பாட்டு, நாட்டியம், பந்தல் என்று விரயம் பண்ணுவது போக வேண்டும். நிஜமான சீர்திருத்தம், வரதட்கிணை ஒழிப்புதான்.