துவாதசாந்த மஹாபீட நிஷண்ணாய நமோ நம: ஓம்
ஒவ்வோரு மதத்திலும் சின்னங்களும், மூர்த்திகளும், சடங்குகளும் வேறுபடலாம். ஆனால், அருள் தரும் பரமாத்மா மாறவில்லை. எனவே எவரும் தங்கள் மதத்தைவிட்டுவிட்டு இன்னொரு மதத்திற்கு மாறவேண்டியதில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தங்கள் பிறந்த மதத்தை மட்டுமின்றி சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்.
நம் சொத்து என்ற நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் விருப்பப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே இறைவனின் சொத்தாகிய நாமும் நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால், நமக்கு பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.
ஸஹஜானந்த ஸம்பூர்ண ஸாகாராய நமோ நம:
வாக்குக் கட்டுப்பாட்டை வழக்கத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும். பிறருடைய மனதைப் புண்படுத்தாத பேச்சே பேச வேண்டும். தன் ஆத்மாவை உயர்திக் கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பது தான். அது தொலைந்தால் அடக்கத்தோடு, ஆனந்தத்தோடு எந்த காரியத்தையும் இறைவனுக்கு அர்பணிக்கும் புத்தியோடு செய்து நாமும் நலம் பெறலாம். உலகத்தையும் நலமாக வைத்திருக்கலாம்.
ஓம் ஆஸ்ரிதாச்ரயனீயத்வ ப்ரபகாய நமோ நம:
கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்குப் பதில், கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும்.
வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு போவதால், வீண் ஆசை தான் அதிகமாகும். எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.
தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு விட்டோமானால், அப்புறம் அதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் கேடுதான். போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.